gomcoastalnews. Powered by Blogger.

கடற்கரையைச் சுத்தப்படுத்தும் திட்டம் தொடக்கம்

No comments

 கடற்கரையைச் சுத்தப்படுத்தும் திட்டம் தொடக்கம்

காயல்பட்டினம் கடற்கரையை - உலக காயல் நல மன்றங்களின் வழிகாட்டலில், காயல்பட்டினம் நகராட்சியுடன் இணைந்து பொதுமக்கள் துப்புரவு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது.
காயல்பட்டினம் நகராட்சியில் போதிய அளவுக்கு துப்புரவுப் பணியாளர்கள் இல்லாமையைக் காரணங்காட்டி, கடற்கரையில் துப்புரவு செய்யும் பணி என்றாவது ஒரு நாளில் மட்டும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால், கடற்கரையின் மணற்பரப்பு முழுவதும் குப்பைகள் தேங்கி சுகாதாரச் சீர்கேடாக காட்சியளித்தது.
ஐக்கிய அரபு அமீரகம் துபை காயல் நல மன்றம், நகராட்சியுடன் இணைந்து பொதுமக்களின் ஒத்துழைப்புடன் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் திட்டத்தை முன்வைத்தது. சவூதி அரேபியா தம்மாம் காயல் நல மன்றம், கத்தர் காயல் நல மன்றம், தாய்லாந்து காயல் நல மன்றம் ஆகிய மன்றங்கள் இத்திட்டத்தின் கீழ் இணைய முன்வந்தன.
காயல்பட்டினம் நகராட்சியின் ஒத்துழைப்புடன், கடற்கரையை, மாத ஊதிய அடிப்படையில் சீருடையணிந்த 3 துப்புரவுப் பணியாளர்களைக் கொண்டு அன்றாடம் துப்புரவு செய்வதென்றும், கடற்கரை மணற்பரப்பில் வணிகம் செய்பவர்களால் அங்கு குப்பைகள் சேராமலும், மணற்பரப்பு மாசு படாமலும் காப்பது என்றும் முடிவு செய்யப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, இதுகுறித்து பொதுமக்களுக்கு நகரின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடற்கரை துப்புரவுத் திட்ட தொடக்க நிகழ்ச்சி, கடற்கரை நுழைவாயில் அருகே, நடைபெற்றது. துபை காயல் நல மன்றத் தலைவர் ஆடிட்டர் ஜெ.எஸ்.ஏ. புகாரீ தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் ஏ.எம். தவ்ஃபீக் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.  ராவன்னா அபுல்ஹஸன், விளக்கு தாவூத் ஆகியோர் அறிமுகவுரையாற்றினார்.
தம்மாம் காயல் நல மன்றத் தலைவர் எஸ்.ஏ. அஹ்மத் ரஃபீக், துணைத் தலைவர் சாளை எஸ். ஜியாஉத்தீன், முன்னாள் தலைவர் டாக்டர் இத்ரீஸ், தாய்லாந்து காயல் நல மன்றச் செயலர் எம்.எஸ். செய்யித் முஹம்மத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எஸ்.கே. ஸாலிஹ் திட்ட விளக்கவுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ். பொன்வேல்ராஜ் கலந்துகொண்டு பேசினார்.

No comments :

Post a Comment