gomcoastalnews. Powered by Blogger.

மாமல்லபுரத்தில் சர்வதேச அலை சறுக்குப் போட்டி

No comments

மாமல்லபுரத்தில் சர்வதேச அலை சறுக்குப் போட்டி

First Published : 13 August 2015 03:04 AM IST



மாமல்லபுரத்தில் தனியார் அலை சறுக்குப் பயிற்சிக் கூடத்தின் சார்பில், சர்வதேச அலை சறுக்குப் போட்டிகள் 3 நாள்கள் நடைபெற்றன. இதில் 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
 பரந்து விரிந்த கடலுக்குள் அலைகளில் சறுக்கி விளையாடுவதால் அலை சறுக்கு விளையாட்டு என்றழைக்கப்படுகிறது.

 இந்த விளையாட்டில் பங்கேற்பவர்கள் உடல் திறனும், சிதறாத கவனம் கொண்டவர்களாக இருக்க வேண்டும், ஐரோப்பிய நாடுகளில் புகழ்பெற்ற இந்த விளையாட்டு தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம், கோவளம் கடற்கரையில் தனியார் அலை சறுக்குப் பயிற்சிப் பள்ளியின் சார்பில் வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
 மாமல்லபுரம் கடற்கரையில் சர்வதேச அளவில் 3 நாள்கள் நடைபெற்ற போட்டிகளில் ஆஸ்திரேலியா, மாலத்தீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

 இதில் உள்நாட்டுப் பயணிகளுக்கு தனியாகவும், வெளிநாட்டுப் பயணிகளுக்கு தனியாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் கட்டுமரம் செலுத்துதல், நீச்சல் போட்டிகள், கடற்கரை மணலில் ஓட்டப் பந்தயமும் நடைபெற்றது. வெற்றி பெற்ற அலை சறுக்கு வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

 முன்னதாக சென்னை கடலோரக் காவல் படை ஆய்வாளர் திருலோகம் அலை சறுக்கு விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாமல்லபுரம் கடலோரக் காவல் படை ஆய்வாளர் பி.வேலு தலைமை வகித்தார். 

 மாமல்லபுரம் பேரூராட்சி மன்றத் தலைவர் எம். கோதண்டபாணி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் அலை சறுக்கு ஒருங்கிணைப்புப் பயிற்சியாளர்கள் டேவிட், அரவிந்த், முகேஷ், மீனவர் பஞ்சாயத்து நிர்வாகி பாட்சா பெருமாள், உள்ளாட்சி உறுப்பினர் ஆர்.சுரேந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments :

Post a Comment